இந்தியா - இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் 13 பேரின் சடலங்கள் இன்று காலை வரை மீட்கப்பட்டன.
இந்தியாவின் வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் ரெக்காங் பியோ – சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதன்போது நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து உள்ளிட்ட சில வாகனங்கள் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த இந்தோ – திபெத் எல்லைக் காவல் படையினர் மற்றும் தேசியப் படையினர் மீட்பு பணியை தொடங்கினர்.
தேடுதலின்போதுர நேற்று இரவு சில சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று காலை வரையில் 13 சடலங்கள் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவில் ஒரு பேருந்து சிக்கியதால் அந்த பேருந்தில் எத்தனை பேர் பயணித்தார்கள்? என்று தெரியவில்லை. 60க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் வானிலை சீரடைந்தால் ஹெலிகப்டர்களை பயன்படுத்தி மீட்புப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படும் என இமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை நேரில் சென்று அவதானிக்கவுள்ளதாகவும் அவா் கூறியுள்ளார்.